Friday, April 10, 2020

12 - விமலா ரமணி


எழுத்தாளர் விமலாரமணியின் பூர்வீகம் திண்டுக்கல். அங்குள்ள செயின்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளியில் படித்துள்ளார். 1955-ல் கோவை சிங்காநல்லூர் நூற்பாலையில் கணக்காளராக இருந்த ரமணியுடன் திருமணம். பிறகு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி பி.ஏ. படித்துள்ளார்.

ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு மேலாக, 1,000 சிறுகதைகள், 1,000 நாவல்கள், ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 1977-ல் தினமணி கதிரில் சிறுகதைக்கு முதல் பரிசு, 1978-ல் குங்குமத்தில் சிறுகதைக்கு முதல் பரிசு, 1979-ல் கலைமகள் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு என 1970-களிலேயே நிறைய பரிசுகள் பெற்றுள்ளார். தொலைக்காட்சியில் முழு நேர நாடகங்கள், சீரியல்கள், மேடை நாடகங்கள், வானொலிக்கும் நிறைய எழுதியிருக்கிறார்.

சமூக நலத் திலகம், விஐபி விருது, எழுத்துச் சுடர், மனிதநேய மாண்பாளர், சாதனை பெண்மணி, புதினப் பேரரசி, நாவலரசி என்றெல்லாம் பட்டங்களும் பெற்றுள்ள விமலாரமணியின் நாவல்களில் உள்ள பெண் கதாபாத்திரங்களை ஆய்வு செய்து, மதுரை பல்கலைக்கழகத்தில் நான்கு பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

சிறு வயதில் கல்கியின் சிவகாமியின் சபதம், அலை ஓசை, பொன்னியின் செல்வன் தொடர் கதைகளைப் படித்தபோது, எழுத்தின் மீது ஆர்வம் வந்துள்ளது. திருமணத்துக்குப் பின்னர் கதை எழுதத் தொடங்கியபோது, கணவர் ஊக்குவித்துள்ளார். 1956-ல் `அமைதி'
என்ற கதையை எழுதி, கணவரிடம் படிக்கத் தந்துள்ளார். அதைப் பாராட்டியவர், அப்போது கோவையிலிருந்து வெளி வந்துகொண்டிருந்த `வசந்தம்' இதழாசிரியரிடம் அதை தந்துள்ளார். அதுவே முதல் பிரசுரம்.
பிறகு, கலைமகள் வெள்ளி விழாவுக்காக நாடகம், கவிதை, சிறுகதை, குறுநாவல் என பல போட்டிகளை அறிவிக்க, அத்தனை பிரிவுகளிலும் கலந்துகொண்டுள்ளார். அதில், நாடகம் பரிசு பெற்றிருக்கிறது. ஆசிரியர் கி.வா.ஜ. பாராட்டுக் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இப்படி தொடங்கிய விமலா ரமணியின் எழுத்துப் பயணம், இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இவர் எழுத்திற்குக் கிடைத்த பரிசுகள்-

குங்குமம்’ - டாலர் பரிசு - முதல் பரிசு (78), ‘தினமணிக்கதிர்’ - சிறுகதைப் போட்டி முதல் பரிசு (77), ‘கலைமகள்’ - குறுநாவல்  போட்டி முதல் பரிசு (79), ‘கல்கி’ - சிறுகதைப் போட்டி - பரிசு, ‘சுஜாதா’ - குறுநாவல் போட்டி - முதல் பரிசு மற்றும் பல. சமூக  நலத்திலகம், வி.ஐ.பி. விருது, எழுத்துச்சுடர், சாதனைப் பெண்மணி, முத்தமிழ் வித்தகி, சாதனையாளர் விருது, மனிதநேய  மாண்பாளர், நாவலரசி என பல பட்டங்களும் உண்டு.


No comments:

Post a Comment