Friday, April 3, 2020

3 - வசுமதி ராமசாமி



வசுமதி ராமசாமி...பெண் எழுத்தாளர்கள் வரிசையில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவர்களில் ஒருவர் ஆவார்.

1917ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் நாள் பிறந்தவர் இவர்.சமூக சேவையாளர்.அகில இந்திய வானொலியின் சென்னைப் பிரிவில் ஒலிபரப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.காந்திஜியை சந்தித்து,அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றவர்.மகாத்மாவுடன் தென்னிந்திய விஜயங்கள் போது உடன் சென்றவர்.

தமிழ் எழுத்தாளராக மட்டுமன்றி ஆங்கிலத்திலும் எழுத வல்லவராய் இருந்தார்.ராஜாஜியால் பாராட்டப்பட்டவர்.

பன்னிரெண்டாம் வயதில்  ராமசாமியை மணந்தார்.ராமசாமி, முன்னணி வழக்கறிஞர்.மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்.தன் மனைவியின் எழுத்தார்வத்திற்கு உறுதுணையாய் இருந்ததுடன் 62 ஆண்டுகள் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்தினார்.அசோக் லேலண்ட் நிர்வாக இயக்குநர் சேஷசாயி இவரது புதல்வர்.தவிர்த்து விஜயலட்சுமி ராஜசுந்தரம்,சமூக சேவகி சுகந்தா சுதர்சனம் ஆகிய இருவரும் புதல்விகள் ஆவார்கள். 

இலக்கியச் சிந்தனை அமைப்பு ஆரம்பித்த முதல் மாதமே இவர் எழுதிய "சிவன் சொத்து" என்ற சிறுகதை..அந்த மாதம் வெளிவந்த சிறுகதைகளிலேயே சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.தேர்ந்தெடுத்தவர் அகிலன்.

வசுமதி, நூற்றுக்கணக்கான சிறுகதைகளும்,நான்கு புதினங்களும் எழுதியுள்ளார்.

அவற்றில் ஒன்று "காப்டன் கல்யாணம்".ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்தது.இந்நாவல் இந்திய பாகிஸ்தான் காஷ்மீர்ப் போர்ப் பின்னணியை மையமாக வைத்து எழுதப்பட்டது.கல்கியின் அலைஓசை போல இதையும் சமகால சரித்திர நாவல் எனலாம்.இத்தொடர் மிகவும் பாராட்டப் பட்டு..அனைவராலும் பேசப்பட்டது.

கொத்தமங்கலம் சுப்புவின் "தில்லானா மோகனாம்பாள்' விகடனில் வெளிவந்த அதே காலகட்டத்தில், வசுமதி ராமசாமியின் "காப்டன் கல்யாணமும்' விகடனில் வந்தது. "தில்லானா மோகனாம்பாள் வந்த நேரத்திலேயே என் நாவலும் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி உண்டு. அதைப் படிப்பவர்கள் எல்லாம் என் எழுத்தையும் படிப்பார்கள் இல்லையா?" என்று எந்தப் பொறாமையும் இல்லாமல் அவர் சொல்லி மகிழ்ந்ததுண்டு. கல்கி எழுத்துகளின் தீவிர ரசிகை. தம் எழுத்தில் தென்படும் மெல்லிய நகைச்சுவைக்குக் கல்கிதான் தமது ஆசான் என்று குறிப்பிடுவார். "தேவியின் கடிதங்கள்" என்ற இவரது நூலுக்கு அணிந்துரை வழங்கியவர் ராஜாஜி.
எழுத்தாளர் லட்சுமி, குகப்ரியை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, சரோஜினி வரதப்பன் ஆகியோரின் நெருங்கிய தோழியாக இருந்தவர்.

வசுமதி நூற்றுக்கணக்கான சிறுகதைகளும் நான்கு புதினங்களையும் எழுதியுள்ளார். அவை பல்வேறு தமிழ் இதழ்களில் வெளிவந்துள்ளன.

வை மு கோதைநாயகி ஆசிரியையாக இருந்து நடத்திய ஜகன்மோகினி இதழில் வசுமதி ராமசாமியின் படைப்புகள் நிறைய வெளிவந்தன. தினமணிக் கதிர், கல்கி, விகடன், சுதேசமித்திரன், பாரததேவி, சின்ன அண்ணாமலையின் வெள்ளிமணி முதலிய பல இதழ்களில் தொடர்ந்து எழுதினார்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, எஸ்.அம்புஜம்மாள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.

"ஈசன் அருள்பெற்ற இளங்கன்றுகள்' என்ற ஆன்மிக நூலின் ஆசிரியராகவும், பாரத தேவி, ராஜ்ய லட்சுமி போன்ற பெண் முன்னேற்றத்துக்கான இதழ்களின் ஆசிரியராகவும் இருந்தார்.

முத்துலட்சுமி ரெட்டி,துர்காபாய் தேஷ்முக்,ருக்மிணி லட்சுமிபதி,அம்புஜம்மாள் உள்ளிட்ட பலருடன் இவர் கொண்ட நட்பு இவரைச் சமூக சேவை செய்யத் தூண்டியது. அன்னிபெசன்ட் நிறுவிய "இந்திய மாதர் சங்கம்' என்ற, எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட அமைப்பை ஈடுபாட்டோடு நடத்திவந்தார். இந்திய மாதர் சங்கத்தில், தற்போதும் அரிய நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்று வசுமதி ராமசாமி பெயரில் நடத்தப்படுகிறது..

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள "சீனிவாச காந்தி நிலைய'த்தை அம்புஜம்மாள், சரோஜினி வரதப்பன் ஆகியோரோடு சேர்ந்து உருவாக்கினார். சுமார் 20 ஆண்டு காலம் அதன் செயலாளராக இயங்கினார். சீனிவாச காந்தி நிலையத்தில் காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டு, அதன்மேல் துளசிமாடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தின் சிறப்பை உணர்ந்து ஔவை டி கே ஷ்ண்முகம் ,இலவசமாக நாடகம் நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை போன்றவற்றின் உருவாக்கத்திலும் ஸ்த்ரீசேவா மந்திர், ஔவை இல்லம், பால மந்திர் முதலிய பல சேவை நிறுவனங்களின் உருவாக்கத்திலும் இவரது பங்களிப்பு உண்டு.
லால்பகதூர் சாஸ்திரியிடம் போர் நிதியாக அக்காலத்திலேயே 500 பவுன் திரட்டிக் கொடுத்தவர்.

ராஜாஜியிடம் மூன்று ஆண்டுகள் உபநிடதமும் கற்றார்.

காஞ்சி முனிவர் பரமாச்சாரியார் கட்டளைப்படி, "ஸ்ரீகற்பகாம்பாள் திருவருள் சங்கம்' என்ற அமைப்பை நிறுவி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு மாங்கல்ய தானம் என்ற வகையில் தங்கத் தாலி அளித்துவந்தார். இத்தொண்டு இவரது மகளால் இன்றும் தொடர்கிறது.

வசுமதி ராமசாமி ஜனவரி 4ஆம்நாள் 2004ஆம் ஆண்டு மறைந்தார்.

இவரின் படைப்புகள்..

தேவியின் கடிதங்கள்
காப்டன் கல்யாணம், காவிரியுடன் கலந்த காதல்,சந்தனச் சிமிழ்,பார்வதியின் நினைவில்,பனித்திரை,ராஜக்கா.





.

No comments:

Post a Comment