சித்தி ஜூனைதா பேகம் 1917ல் நாகூரில் பிறந்தவர்.இவர் முதல் தமிழ் முஸ்லிம் புரட்சிப் பெண் எழுத்தாளர் ஆவார்.
இவருக்கு 12ஆவது வயதிலேயே திருமணம் ஆனது. ஏ.பகீர் மாலிமார் என்பவரை மணந்தார்.நான்கு ஐந்து ஆண்டுகளே நீடித்த அந்தத் திருமண வாழ்க்கையில் நான்கு குழந்தைகளுக்குத் தாயானார்.பதினேழாவது வயதில் கணவனை இழந்தார்
பள்ளிப்படிப்பு 3 ஆண்டுகள் மட்டுமே.பின்னர் தாருல் இஸ்லாம் என்ற இதழைப் படித்துதான் செந்தமிழினைக் கற்றுக் கொண்டார்.தன் பதினாறாம் வயதில் எழுதவும் கற்றுக் கொண்டார் .
பின்னர் நிறைய சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதினார். இவர் எழுதிய முதல் கதை தாருல் இஸ்லாம் இதழில் வந்தது.
தன் முதல் சிறுகதையை, முஸ்லிம் பெண்களின் உரிமைக்குப் போராடிய தாவீத் ஷாவிற்கு அனுப்ப, அவர் ஒரு பெண் எழுதிய சிறுகதை என்றதும் ஆனந்தம் அடைந்தார்.முஸ்லிம் பெண்கள் கூடக் கதை எழுதத் தொடங்கி விட்டார்கள் என பெருமிதம் அடைந்தார்.
இவர் எழுதி வெளிவந்த நூல்கள்-
காதலா கடமையா - நாவல் 1938ஆம் ஆண்டு
செண்பகவல்லிதேவி அல்லது தென்னாடு போந்த அப்பாசிய குலத் தோன்றல் - நாவல்-1947 ஆம் ஆண்டு.
மகிழம் பூ - நாவல்
இஸ்லாமும் பெண்களும் கட்டுரைத் தொகுப்பு (1995)
மலைநாட்டு மன்னன் (நாவல்)
ஹலிமா அல்லது கற்பின் மாண்பு
பெண் உள்ளம் அல்லது கணவனின் கொடுமை
திரு நாகூர் அண்ணலின் திவ்ய வாழ்க்கை வரலாறு - 1946
காஜா ஹஸன் பசரீ (ரஹ்) - முஸ்லிம் ப்ருமக்கள் வரலாறு
இஸ்லாத்தில் ஆணுக்கு ஒரு நீதியும், பெண்ணுக்கு ஒரு நீதியும் கிடையாது.ஆண் மகனுக்கு ஆகும் என்றால் பெண் மகளுக்கும் ஆகும் என 70 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்ணுரிமை பேசிய தமிழின் முதல் இஸ்லாம் பெண் எழுத்தாளர் இவர். என் வாழ்க்கை அனுபவமே என் எழுத்துக்கள் என்பார் இவர்.
மற்ற எந்த சமூகத்தினரைவிடவும் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்தில், சித்தி ஜுனைதா வெறும் எழுத்தாளர் என்ற மட்டத்தில் நின்றுவிடவில்லை. பெண்ணியத்தையும் ஆண், பெண் சமத்துவத்தையும் தன் எழுத்துக்களிலும் நடைமுறை வாழ்விலும் தீவிரமாக வெளிப்படுத்தினார்.
21ஆவது வயதில் எழுதிய "காதலா கடமையா" என்ற புரட்சி நாவல், இஸ்லாமிய சமூகத்தின் முதல் பெண் எழுத்தாளர் எனும் பெருமையை இவருக்கு அளித்தது.18 அத்தியாயங்களைக் கொண்ட 'காதலா கடமையா' நாவல், சரித்திரப் பின்னணியை கொண்ட நாவல். மதுரை பின்னணியில் எழுதப்பட்ட, இந்த நாவல், அது வெளிவந்த காலக்கட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நூலுக்கு விமர்சனம் எழுதிய எழுத்தாளர் புதுமைப்பித்தன், "முஸ்லிம் பெண்டிர் எழுத முன் வருவதை நாம் வரவேற்கிறோம்...' என்று பாராட்டியிருந்தார்.
1998ஆம் ஆண்டுமார்ச் மாதம் 19ஆம் நாள் தன் 81ஆவது வயதில் அமரர் ஆனார்
No comments:
Post a Comment